க்ரைம்

சென்னை | கார் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரம்: கைதான தலைமை காவலர் பணியிடை நீக்கம்

செய்திப்பிரிவு

சென்னை: கார் ஓட்டுநர் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட தலைமைக் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (39). கால் டாக்ஸி ஓட்டுநர். இவர் கடந்த 21-ம் தேதி இரவு தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் வானகரம் சர்வீஸ் சாலையில் காரை நிறுத்திவிட்டு, காருக்குள் ஒரு பெண்ணுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் இருந்த மதுரவாயல் தலைமை காவலர் ரிஸ்வான், காரின் அருகே சென்று வெளியே வரும்படி ராஜ்குமாரிடம் கூறினாராம்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், ராஜ்குமாரை ரிஸ்வான் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மயங்கி விழுந்த ராஜ்குமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

இந்நிலையில், ராஜ்குமார் இறப்பில் சந்தேகம் இருப்பதாக அவரது அண்ணன் ஜெயக்குமார், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, ராஜ்குமாருடன் காரில் பேசிக் கொண்டிருந்த பெண்ணை தேடி பிடித்து அவரிடம் போலீஸார் விசாரித்தனர். தலைமைக் காவலர் ரிஸ்வான் தாக்கியதால்தான் ராஜ்குமார் இறந்ததாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் ரிஸ்வான் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், அவரை பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார்.

SCROLL FOR NEXT