சென்னை: சென்னையில் 12 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்கொடுமை செய்த தொழிலாளிக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த தொழிலாளி பிரபு(38). இவர் எம்கேபி நகர் பகுதியில் தாயாருடன் வசித்து வந்த 12 வயது சிறுமியை கடந்த 2022 ஜூன் 28 அன்று பாலியல் ரீதியாக துன்புறுத்தி வன்கொடுமை செய்ததாக எம்கேபி நகர் அனைத்து மகளிர் போலீஸார் பிரபுவை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்து வந்தது.
அப்போது போலீஸார் தரப்பில் அரசு சிறப்பு வழக்கறிஞர் எஸ்.அனிதா ஆஜராகி பிரபு மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தார். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது எனக்கூறி பிரபுவுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார்.