சென்னை: போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக்கின் நெருங்கிய கூட்டாளியை டெல்லி போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீஸார் சென்னையில் கைது செய்துள்ளனர். இதையடுத்து இவ்வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: உணவு பொருட்கள் ஏற்றுமதி என்ற பெயரில் இந்தியாவிலிருந்து போதைப் பொருளை கடத்திய விவகாரத்தில் ஏற்கெனவே டெல்லியில் வைத்து தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், மூளையாக செயல்பட்ட ஜாபர் சாதிக் கடந்த 9-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அவரை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இதில் தமிழ் சினிமா தயாரிப்பு மற்றும் இந்தி சினிமா தயாரிப்பாளர்கள், முக்கிய அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் இருப்பதாகவும் அரசியல் கட்சிக்கு பல லட்சம் ரூபாய் நிதி அளித்ததாகவும், போதைப் பொருளுக்கான மூலப் பொருட்களை வெளிநாடுகளுக்கு சட்ட விரோதமாக கடத்தியது தொடர்பாகவும் பல்வேறு தகவல்களை வெளியிட்டுள்ளதாக தெரிகிறது.
இதுஒருபுறம் இருக்க ஜாபர் சாதிக் மீது அமலாக்கத் துறையும் நிதிமோசடி வழக்கு பதிவு செய்தது. மேலும், போதைப் பொருள் கடத்தல் வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்கின் சகோதரர்களான முகமது சலீம், மைதீன் ஆகியோரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வர போலீஸார் முடிவு செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் தலைமறைவாகினர். இருவரும் வெளிநாடு தப்பிச் செல்வதை தடுக்க அவர்களுக்கு எதிராக அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக்அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஜாபர் சாதிக்கிடம் நடத்தப்பட்டு வரும் விசாரணையில் திருச்சியைச் சேர்ந்த சதா என்கிற சதானந்தம் (50) என்பவர் போதைப் பொருள் கடத்தலில் உதவியாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்ய அண்மையில் போலீஸார் திருச்சி வந்தனர். அவர் அங்கு இல்லாததால் அவரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் பதுங்கி இருந்த அவரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை உடனடியாக டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். ஜாபர் சாதிக் சென்னையில் போதைப் பொருள் கடத்துவதற்கு இவர்தான் உறுதுணையாக இருந்தாராம். சோதனையில் சிக்காமல் இருக்கும் வகையில் போதைப் பொருட்களை உணவு பொருட்களுடன் கலப்படம் செய்வது மற்றும் பேக் செய்வதில் இவர் கை தேர்ந்தவர் என கூறப்படுகிறது.
திருச்சியை சேர்ந்தவராக இருந்தாலும் சென்னையிலேயே முகாமிட்டு இவ்வேலைகளை செய்து வந்ததாகவும், போதைப் பொருள் கடத்துவதற்காக தனியாக குடோன் அமைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது. இவரையும் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தற்போது கைது செய்யப்பட்ட சதாவையும் சேர்த்து கைது எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.