க்ரைம்

பொன்னேரி | மதுபோதை தகராறில் தொழிலாளி கொலை: காவல் நிலையத்தில் நண்பர் சரண்

செய்திப்பிரிவு

பொன்னேரி: மீஞ்சூர் அருகே மது போதை தகராறில் கூலித் தொழிலாளி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது நண்பர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

மீஞ்சூர் அருகே உள்ள விச்சூர், காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் வெள்ளை அஜீத்(26). கூலித் தொழிலாளியான இவர் மீது, மணலிபுதுநகர் காவல் நிலைய எல்லைப் பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது.

மது அருந்தும் பழக்கம் கொண்ட வெள்ளை அஜீத் நேற்று தன் வீட்டருகே மது போதையில் இருந்துள்ளார். அப்போது, அவர் தன் வீட்டுக்கு எதிரே வசிக்கும் தன் நண்பனான ஜீவா(22) என்பவரை மது அருந்த வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். அவர் வரமறுத்ததால், வெள்ளை அஜீத்துக்கும் ஜீவாவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது, ஜீவாவை அஜீத் கீழே தள்ளிவிட்டதாகத் தெரிகிறது.

இதனால், கோபமடைந்த ஜீவாதன் வீட்டுக்குச் சென்று அரிவாளை எடுத்து வந்து, அஜீத்தை கொலை செய்தார். பின்னர், மணலிபுதுநகர் காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT