பிரதிநிதித்துவப் படம் 
க்ரைம்

நண்பரிடம் வாடகை பணம் கேட்ட உரிமையாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசியவர் கைது @ சென்னை

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை எருக்கஞ்சேரி சூழ்புனல்கரை விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் அப்துல் ரசீத் ( 65 ). நேற்று முன்தினம் நள்ளிரவு இவரது வீட்டின் மீது மர்ம நபர் ஒருவர் பெட்ரோல் நிரம்பிய பாட்டிலில் தீ வைத்து வீசிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சத்தம் கேட்டு ஓடி வந்த அப்துல் ரசீத், இது குறித்து கொடுங்கையூர் போலீஸில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீஸார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இச்சம்பவத்தில் ஈடுபட்டது, வியாசர் பாடி எம்கேபி நகரை சேர்ந்த கரண் ( 24 ) என்பது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில், கரணின் நண்பரான பிரகாஷ் என்பவர், அப்துல் ரசீத் வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார்.

கடந்த 3 மாதங்களாக பிரகாஷ் வாடகை பணம் கொடுக்காததால், வீட்டின் உரிமையாளரான அப்துல் ரசீத்தின் மனைவி, பிரகாஷை சத்தம் போட்டுள்ளார். வாடகை பணம் கேட்டு வீட்டின் உரிமையாளர் தொந்தரவு செய்வதாக, பிரகாஷ் தனது நண்பரான கரணிடம் கூறியிருக்கிறார். இந்நிலையில் தான், கரண் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீ வைத்து அப்துல் ரசீத் வீட்டின் மீது வீசியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸார் கரணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

          
SCROLL FOR NEXT