க்ரைம்

‘போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க தமிழக - புதுச்சேரி காவல் துறை கூட்டு நடவடிக்கை’

செ. ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வகையில் தமிழக போலீஸாருடன் புதுச்சேரி போலீஸார் இணைந்து செயல்பட உள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி காவல் துறையில் ஊர்க்காவல் படை வீரர்களுக்கான 500 காலி பணியிடங்களை நிரப்ப புதுச்சேரி அரசு சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு அதற்காக விண்ணப்பங்களை பெறப்பட்டது. அதன்படி 20,135 விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இவர்களுக்கான உடற்தகுதி தேர்வு புதுச்சேரி கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் இன்று தொடங்கியது. இதில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உடற்பயிற்சி தேர்வை தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் அமைச்சர் நமச்சிவாயம் கூறியது: ''புதுச்சேரி அரசு பொறுப்பேற்ற பிறகு அரசு காலி பணியிடங்களை நிரப்புகிறோம். காவல் துறையில் முதல்கட்டமாக 390 காவலர் பணியிடம் நிரப்பப்பட்டுள்ளது. 253 பேர் இரண்டாம் கட்டமாக தேர்வாகி பயிற்சியில் உள்ளனர். ஊர்க்காவல் படையில் 500 பேரை தேர்வு செய்ய உடல்தகுதி தேர்வு தொடங்கியுள்ளது. 23 நாட்களுக்கு நடக்கவுள்ளது. நேர்மையான முறையில் தேர்வு நடத்தப்படும். வெகு விரைவில் மீதமுள்ள டெக் ஹேண்டலர், 200 ஹோஸ்டல் ஹோம்கார்டு உதவி ஆய்வாளர் 61 பணியிடம் நிரப்படும். காவலர்களுக்கான பதவி உயர்வு மற்றும் கருணை அடிப்படையில் வேலை போன்ற காவலர்களின் கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

புதுச்சேரியில் சட்டம் - ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது, புதுச்சேரி மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தை தடுக்க தமிழக போலீஸாருடன் குழுவாக இணைந்து புதுச்சேரி போலீஸார் செயல்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போதைபொருள் நடமாட்டம் தடுக்கப்படும். புதுச்சேரியில் மாநிலத்தில் உள்ள அனைத்து கண்காணிப்பு கேமராக்களை சரி செய்யப்படஉள்ளது. அதேபோன்று காவல் நிலையங்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து காவல் நிலையங்களிலும் மூன்று கோடி ரூபாய் செலவில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளது. ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவுள்ளோம்'' என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT