க்ரைம்

நர்சிங் மாணவிக்கு பாலியல் தொல்லை: தனியார் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டு சிறை

செய்திப்பிரிவு

திண்டுக்கல்: மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், திண்டுக்கல் தனியார் நர்சிங் கல்லூரி தாளாளருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

திண்டுக்கல் அருகே முத்தனம்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் தாளாளராக பொறுப்பு வகிப்பவர் ஜோதிமுருகன் (50). இவர், தனது கல்லூரியில் பயின்றமாணவிக்கு 2021-ம் ஆண்டு பாலியல் தொந்தரவு செய்ததாக புகார்எழுந்தது.

இதன் பேரில் தாடிக்கொம்புபோலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் ஜோதிமுருகனை கைது செய்தனர். இவருக்கு உடந்தையாக இருந்ததாக கல்லூரி விடுதிக் காப்பாளர் அர்ச்சனா(26) மீதும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அர்ச்சனா

திண்டுக்கல் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இதில், குற்றம் சுமத்தப்பட்ட ஜோதிமுருகனுக்கு 7 ஆண்டுகள் சிறை, ரூ.75 ஆயிரம் அபராதம், விடுதிக் காப்பாளர் அர்ச்சனாவுக்கு 5 ஆண்டுகள் சிறை, ரூ.25ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதிகருணாகரன் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதையடுத்து, இருவரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட ஜோதிமுருகன், கடந்த மக்களவைத் தேர்தலில் அமமுக சார்பில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தவர் என்பதும் இந்த வழக்கில் சிக்கியதையடுத்து கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

          
SCROLL FOR NEXT