சென்னை: சென்னை அரும்பாக்கத்தில் உள்ளவரதராஜ பெருமாள் கோயிலில் வைத்திருந்த 2 செம்பு சிலைகள்திருடப்பட்டு, அதற்கு பதிலாக போலியான சிலைகள் வைக்கப்பட்டுள்ளது தொல்லியல் வல்லுநர்கள் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: அரும்பாக்கம், பெருமாள் கோயில் தெருவில் ஸ்ரீஅருள்மிகு சத்திய வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயிலின் செயல் அலுவலராக இருக்கும் குமரேசன்(50), அரும்பாக்கம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் மனு அளித்தார். அதில், ``இக்கோயிலில் பொறுப்பேற்றது முதல் கோயிலில் உள்ள பொன், வெள்ளி இனங்கள் மற்றும்உற்சவ உலோக சிலைகளின் உண்மைத் தன்மையை ஆய்வு செய்து வருகிறேன்.
கடந்த ஜூன் 21-ம் தேதி நகை சரிபார்க்கும் அலுவலர் மற்றும் தொல்லியல் வல்லுநர்களை வரவழைத்து ஆய்வு செய்தேன். அப்போது, கோயிலில் இருந்த ஸ்ரீமன்நாதமுனி மற்றும் ஆஞ்சநேயரின் செம்பு சிலைகள் மாற்றப்பட்டு அதற்குப் பதில் வேறு சிலைகள்வைக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. உண்மையான சிலைகளைத் திருடிவிட்டு, அதற்கு மாற்றாக போலி சிலைகளை யாரோ வைத்துள்ளனர். எனவே, இதில் தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, திருடுபோன உண்மையான சிலைகளை மீட்க வேண்டும் என புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து அரும்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.