க்ரைம்

பழநியில் அடுத்தடுத்து 4 யாசகர்கள் மர்ம மரணம்

செய்திப்பிரிவு

பழநி: பழநியில் ஒரே நாளில் 4 யாசகர்கள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

பழநி அடிவாரம் மற்றும் கிரிவீதி பகுதிகளில் ஏராளமான ஆதரவற்றோர், யாசகர்கள் சுற்றி திரிகின்றனர். அவர்கள் கோயில்களில் வழங்கப்படும் அன்னதானம், பக்தர்களிடம் யாசகம் பெற்று வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பழநி பேருந்து நிலையத்தில் வெவ்வேறு பகுதிகளில் 65 வயது மதிக்கத்தக்க 4 யாசகர்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர்.

இது குறித்து தகவலறிந்த வருவாய்த் துறையினர் மற்றும் போலீஸார் அவர்களின் உடல்களை கைப் பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், யாசகர்கள் 4 பேரின் விவரம் தெரியவில்லை.

அவர்களுக்கு உடல்நலக் குறைபாடு இருந்துள்ளது. இறப்புக்கு அதுதான் காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பிரேதப் பரிசோதனைக்கு பிறகே தெரியவரும் என்று கூறினர்.

SCROLL FOR NEXT