க்ரைம்

தவாக முன்னாள் நிர்வாகி உட்பட 2 பேர் கொலை: தலைமறைவான கும்பலை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு

செய்திப்பிரிவு

ஓசூர்: ஓசூரில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் முன்னாள் நிர்வாகி மற்றும் முன்னாள் உறுப்பினரை வெட்டி கொலை செய்த 15 பேர் கொண்ட கும்பலைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

ஓசூர் பிஸ்மில்லா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பர்கத்(31). இவர்தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் ஓசூர் நகர முன்னாள் தலைவர். ஓசூர் பழைய வசந்த நகர் பகுதியைச் சேர்ந்த பொன்வண்ணன் என்றசிவா (27). இவர் அக் கட்சியின் முன்னாள் உறுப்பினர். மற்றொருவர் பார்வதி நகரைச் சேர்ந்த பக்கா பிரகாஷ்.

நண்பர்களான இவர்கள் 3 பேர்மீதும் ஓசூர் நகர காவல் நிலையத்தில் அடிதடி, வழிப்பறி. திருட்டு மற்றும் கொலை முயற்சி உள்ளிட்டபல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் பக்கா பிரகாஷ் தொடர்ந்து குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்ததால், கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் குண்டர் சட்டத்தில் கைதாகி, சேலம் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இந்நிலையில், இவர் ஜாமீனில் வெளியில் வந்தார்.

இதையடுத்து, இவரை சேலம்சிறையிலிருந்து நேற்று முன்தினம்இரவு பர்கத் மற்றும் சிவா ஆகியோர் காரில் ஓசூருக்கு அழைத்துவந்தனர். பின்னர் பார்வதி நகரில்உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு, இருவரும் காரில் ஏற நடந்து வந்தனர்.

அப்போது, அப்பகுதியில் மறைந்திருந்த 15 பேர் கொண்ட கும்பல் சிவாவின் தலையைவெட்டி தெருவில் வீசினர். மேலும், பர்கத்தை வெட்ட முயன்றபோது, அவர் அவர்களிடமிருந்து தப்பி ஓடி பக்கா பிரகாஷின் வீட்டில் உள்ளே நுழைந்தார்.

இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்கா பிரகாஷ் வீட்டின்சுவரில் ஏறி குதித்து அங்கிருந்து தப்பினார். வீட்டின் உள்ளே சென்றபர்கத், வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடினார். ஆனால், அந்த கும்பல் வீட்டின் மேற்கூரை வழியாக உள்ளே குதித்து பர்கத்தை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினர்.

இதுகுறித்து பக்கா பிரகாஷ், ஓசூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, டிஎஸ்பி பாபு பிரசாந்த் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று கொலையான இருவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக போலீஸார் வழக்குப்பதிவு செய்து, கொலை நடந்த பகுதியில் உள்ளசிசிடிவியில் பதிவான காட்சிகள்அடிப்படையில் கொலையாளிகளை 5 தனிப்படை அமைத்து தேடிவருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக கொலை நடந்திருக்கலாம் என போலீஸார் சந்தேகம் அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT