வந்தவாசி அருகே ஓடும் பேருந்தில் இருந்தவாறு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பேருந்து ஊழியர்கள். 
க்ரைம்

வந்தவாசியில் முந்தி செல்லும் போட்டியில் அசுர வேகத்தில் 2 தனியார் பேருந்துகள்: ஓட்டுநர்கள் அத்துமீறலால் அச்சம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: வந்தவாசி அருகே இரு தனியார் பேருந்துகள் அசுர வேகத்துடன் ஒன்றையொன்று முந்தி செல்லும் போட்டியில் பயணிகள் அச்சமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து ஆரணிக்கு நேற்று முன்தினம் காலை தனியார் பேருந்து புறப்பட்டு சென்றது. இதேபோல், திண்டிவனத்தில் இருந்து தெள்ளார் வழியாக ஆரணிக்கு மற்றொரு தனியார் பேருந்து சென்றது. வந்தவாசி அடுத்த சடத்தாங்கல் கூட்டுச்சாலை அருகே இரண்டு தனியார் பேருந்துகளும் ஒன்றன் பின் ஒன்றாக செல்ல தொடங்கின.

அப்போது வழி தடத்தில் உள்ள பயணிகளை ஏற்றுவதற்காக இரு பேருந்துகளும் ஒன்றையொன்று முந்தி செல்ல போட்டி போட்டுக்கொண்டு அசுர வேகத்தில் சென்றன. அப்போது இரு பேருந்துகளும், சிறிது தூரத்துக்கு சாலை முழுவதையும் அடைத்து கொண்டு அருகருகே சென்றுள்ளன. இரு பேருந்துகளும் ஒன்றையொன்று உரசிக் கொள்ளும் நிலை ஏற்பட்டதால் பயணிகள் அச்சமடைந்தனர். இரு பேருந்து ஊழியர்களும், பயணிகளை பற்றி கவலைப்படாமல், பேருந்துகள் செல்லும்போது வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரண்டு பேருந்துகளுக்கு இடையே முந்தி செல்லும் போட்டியால், எதிர் திசையில் வந்த வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி சாலையோரம் ஒதுங்கிக் கொண்டனர். தனியார் பேருந்துகள் ஓட்டுநர்களின் அத்துமீறலை, பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி 2 பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் ஊழியர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து, 2 பேருந்துகளையும் பறிமுதல் செய்து, பயன்பாட்டை முடக்க ஆட்சியர் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

SCROLL FOR NEXT