சென்னை: சென்னைக்கு விமான நிலையத்தில் தங்கம் கடத்தல் தொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை (டிஆர்ஐ) அதிகாரிகள் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் சினேகா (30), சங்கீதா (28) ஆகிய 2 பெண்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு அவர்களை கண்காணித்தனர். இந்நிலையில் 2 பெண்களும் பணி முடிந்து தங்கள் வீடுகளுக்கு சென்ற சிறிது நேரத்தில் டிஆர்ஐ அதிகாரிகள், 2 குழுக்களாக பிரிந்து இரு பெண்களின் வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.
4.7 கிலோ தங்கம்: அப்போது வீடுகளில் உள்ள கழிப்பறை, பீரோ ஆகியவற்றில் மறைத்து வைத்திருந்த தங்க கட்டிகள், தங்க உருளைகள், தங்கப் பசைகள் போன்றவற்றை கைப்பற்றினர். இருவர் வீடுகளிலும் இருந்து மொத்தம் 4.7 கிலோ தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றினர். அப்போது, துபாயில் இருந்து சென்னை வழியாக இலங்கை செல்லும் டிரான்சிட் பயணிகள், விமானங்களில் கடத்திவரும் தங்கத்தை ரகசியமாக இவர்கள் வாங்கி தங்களுடைய உள்ளாடைகளுக்குள் மறைத்து வைத்து, சுங்கத்துறை சோதனை இல்லாமல் வீடுகளுக்கு கொண்டுவந்துள்ளனர். பின்னர் கடத்தல் கும்பலின் ஏஜெண்ட் வந்து இவர்களிடம் இருந்து தங்கத்தை வாங்கி செல்வது தெரியவந்தது.
தங்கத்தை வாங்கி செல்ல பெண்களின் வீடுகளுக்கு வந்த புதுக்கோட்டையை சேர்ந்த முகமது ஹர்ஷத் (27) என்பவரையும் பிடித்தனர். விசாரணையில் பிடிபட்ட நபர் சென்னை மண்ணடியில் உள்ள விமான நிலைய ஒப்பந்த ஊழியர் கலையரசன் (30) வீட்டில் தங்கியிருந்தது தெரியவந்தது. பின்னர் கலையரசன் வீட்டிலும் சோதனை நடத்தி, 1.5 கிலோதங்கம் மற்றும் ரூ.50 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் மற்றும் இந்திய பணத்தை பறிமுதல்செய்தனர். சினேகா, சங்கீதா, கலையரசன் மற்றும் முகமது ஹர்ஷத் ஆகியோரை கைது செய்தனர். ரூ.5 கோடி மதிப்பு தங்கம், வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.