விழுப்புரம்: விழுப்புரம் அருகே நல்லாப் பாளையம் கிராமத்தில் உள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் சங்கீதா (28). இவரது கணவர் அய்யனார் கடந்த 2014-ம் ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில், 11 வயது மகனுடன் தனியாக வசித்து வருகிறார்.
இந்நிலையில் கணவரின் இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவித் தொகை வழங்க கோரி நல்லாப்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜ் என்பவரை சங்கீதா அணுகியுள்ளார். இதற்காக ரூ.3 ஆயிரம் லஞ்சம் பெற்றுக்கொண்ட கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜ், சங்கீதாவிடம் இருந்து செல்போன் எண்ணைக் கேட்டு வாங்கி, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சங்கீதா தனது உறவினர்களுடன் நவ. 23-ம்தேதி விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இந்நிலையில், நவ.24-ம் தேதி விழுப்புரம் வருவாய் கோட் டாட்சியர் காதர் பாஷா, கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
இந்நிலையில் கண்டாச்சிபுரம் காவல் நிலையத்தினர், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை மற்றும் சாதியை குறித்து பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கிய பாஸ்கர ராஜை நேற்று கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.