பூந்தமல்லி: திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயல் பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று புழல் மத்தியச் சிறையில் இருந்து வந்தவர் `காது' முரளி என்கிற முரளி. சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர், அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூந்தமல்லி தனி கிளைச் சிறைக்கு மாற்றப்பட்டார். அன்று முதல், தன்னை புழல் சிறைக்கு மாற்ற வேண்டும் என்று சிறைக் காவலர்களிடம் முரளி கோரிக்கை விடுத்து வந்துள்ளார். ஆனால், அவரது கோரிக்கை ஏற்கப்படவில்லை.
இதனால் கோபமடைந்த முரளி நேற்று முன்தினம் இரவு,தனக்கு வழங்கப்பட்ட மாத்திரை அட்டையால் தனது கழுத்தில் குத்திக் கொண்டார். காயமடைந்த முரளியை சிறைக் காவலர்கள் உடனடியாக மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முரளியின் உயிருக்கு எந்த பாதிப்பும்இல்லை எனத் தெரிவித்தனர். ஆகவே, முரளியை மீண்டும் பூந்தமல்லி தனி கிளைச் சிறையில் அடைத்தனர்.