கே.கே.நகர் பகுதியில் காரில் கடத்தி வரப்படட ரூ.1 கோடி ஹவாலா பணம் மற்றும் பணம் கடத்தி வர பயன்படுத்திய கார். 
க்ரைம்

சென்னை | காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல்: கே.கே.நகரில் இலங்கை தமிழர் உட்பட 4 பேர் பிடிபட்டனர்

செய்திப்பிரிவு

சென்னை: காரில் கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக இலங்கைத் தமிழர் உட்பட 4 பேர் பிடிபட்டுள்ளனர். தி.நகர் காவல் மாவட்டத்தில் ஹவாலா பணம் (உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரப்படும் பணம்) கை மாறுவதாக அப்பகுதி துணை ஆணையர் அங்கித் ஜெயினுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, அக்கும்பலைப் பிடிக்க உத்தரவிட்டார். அதன்படி, அசோக்நகர் சரக உதவி ஆணையர் மேற்பார்வையில் எம்ஜிஆர் நகர் உதவி ஆய்வாளர் ராஜ்மோகன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீஸார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம் 3 மணியளவில் கே.கே.நகர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆற்காடு சாலையில் அமிர்த மஹால் எதிரில் உள்ள பேருந்து நிறுத்தத்தின் அருகே சந்தேகத்துக்கிடமான முறையில் கார் ஒன்று நிற்பதைத் தனிப்படை போலீஸார் கவனித்தனர். இதையடுத்து, அந்த காரில் அமர்ந்திருந்த 4 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் அளித்தனர். பின்னர், காரை சோதனை செய்தபோது, அதில் கருப்பு நிற டிராவல் பையில் கட்டுக்கட்டாக ரூ.1 கோடி பணம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

ரூ.1 கோடி ஹவாலா பணத்தை கடத்தி வந்ததாக பிடிபட்ட 4 பேர் கும்பல்.

அப்பணத்துக்கு உரிய ஆவணங்கள் அவர்களிடம் இல்லை. மேலும், பணம் எங்கிருந்து, யாருக்குக் கொண்டு வரப்பட்டது என்ற விவரத்தையும் பிடிபட்ட 4 பேரும் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அந்த ஹவாலா பணத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், அப்பணம் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஹவாலா பணத்தை காரில் கடத்தி வந்த கள்ளக்குறிச்சி, கொங்குரபாளையத்தைச் சேர்ந்த எஸ்.கார்த்திகேயன் (33), மயிலாடுதுறையைச் சேர்ந்த மற்றொரு ஆர்.கார்த்திகேயன் (45), இலங்கை, முல்லைத் தீவைச் சேர்ந்தவரும், தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவருமான கமலநாதன் (47), மடிப்பாக்கத்தைச் சேர்ந்த வேங்கட கிருஷ்ணன் (33) ஆகிய 4 பேரிடம் கே.கே.நகர் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT