க்ரைம்

நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் 88 நிறுவன வங்கி கணக்குகள் முடக்கம்: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்

செய்திப்பிரிவு

மதுரை: நியோ மேக்ஸ் மோசடி வழக்கில் தொடர்புடைய 88 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளுன என உயர் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட நியோ-மேக்ஸ் நிதி நிறுவன மோசடி தொடர்பாக மதுரை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து பலரைக் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வரும் கோவில்பட்டியைச் சேர்ந்த நாராயணசாமி உயர் நீதிமன்றக் கிளையில் முன்ஜாமீன் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஜி.இளங்கோவன் விசாரித்தார். அரசு கூடுதல் வழக்கறிஞர் ஆர்.எம்.அன்பு நிதி வாதிடுகையில், நியோ மேக்ஸ் நிறுவனம் 157 பெயர்களில் கிளை நிறுவனங்களை நடத்தியுள்ளது. இதில் 88 நிறுவனங்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன. இதுரை 577 புகார்கள் பெறப்பட்டுள்ளன.

இப்புகார்களின் பேரில் ரூ.108 கோடி மோசடி நடந்துள்ளது. நியோ மேக்ஸ் நிறுவனத்தில் 32 ஆயிரம் பேர் முதலீடு செய்துள்ளனர். மனுதாரர் நிறுவன இயக்குநர்களில் ஒருவர் என்றார். பின்னர் நீதிபதி, நியோ-மேக்ஸ் நிறுவனத்தின் இயக்குநராக மனுதாரர் இருப்பதற்கான ஆதாரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

SCROLL FOR NEXT