பள்ளிக்கரணை: பள்ளிக்கரணையில் முன் விரோதம் காரணமாக இளைஞரை கொலை செய்த வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாயை திட்டியதால் கொலை செய்ததாக அவர்கள் போலீஸ் விசாரணையில் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சென்னை பள்ளிக்கரணை, மயிலை பாலாஜி நகரை சேர்ந்தவர் பிரசாந்த் (28). இவர் நேற்று முன்தினம் இரவு இவரது வீட்டின் அருகில் நண்பர்களோடு சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.
அப்போது அந்த இடத்துக்கு 5 பேர் கொண்ட கும்பல் ஆயுதங்களோடு வந்து பிரசாந்த்தை மட்டும் அழைத்து சென்று அடித்து, கத்தியால் வெட்டி விட்டு அங்கிருந்து தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பிரசாந்த்தை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த பள்ளிக்கரணை காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, சம்பவ இடத்தில் விசாரணை செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய கொலையாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் மேடவாக்கம் அருகே காட்டுப் பகுதியில் பதுங்கியிருந்த பள்ளிக்கரணையை சேர்ந்த சரத்குமார் (எ) சரத் (24), ஜெபராஜ் (21), இம்மானுவேல்(20), வேளச்சேரியை சேர்ந்த திலோத்தீஸ்வரன் (22), முகமது ஷகீல்(20) ஆகிய 5 பேரை பள்ளிக்கரணை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்ததில், “பிரசாந்த், அனைவரையும் அடிக்கடி அடித்து துன்புறுத்தி, தாயை பற்றி இழிவாக பேசுவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். எங்களை எப்போதும் தரம் தாழ்த்தி பேசி வந்ததால் அனைவரும் ஒன்று சேர்ந்து வெட்டி கொலை செய்தோம்” என்று வாக்குமூலம் அளித்தனர். விசாரணைக்கு பின்னர் 5 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.