க்ரைம்

விருத்தாசலம் | ரோந்து வாகனத்தின் மீது மணல் லாரி மோதி உதவி ஆய்வாளர், காவலர் படுகாயம்

செய்திப்பிரிவு

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தின் மீது மணல் லாரி மோதியதில் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் ஒரு காவலர் பலத்த காயத்துடன் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடலூர் - விருத்தாசலம் தேசிய நெடுஞ்சாலையில், ஊமங்கலத்தை அடுத்த பொன்னாலகரம் சுங்கச்சாவடி யில் இருந்து, வடலூர் வரையிலான தேசிய நெடுஞ்சாலையில், நேற்று முன்தினம் நள்ளிரவ நெடுஞ்சாலை காவல் ரோந்து வாகனத்தில் சிறப்பு உதவி ஆய்வாளர் லாரன்ஸூம் முதல் நிலை காவலர் பத்மநாபனும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ரோந்து வாகனம் வடலூர் நோக்கி சென்று, கொண்டிருந்த போது, எதிர்புறத்தில் சாலையின் வளைவு பகுதியில், வந்து கொண்டிருந்த மணல் லாரி எதிர்பாராத விதமாக காவல் ரோந்து வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரோந்து வாகனம் பலத்த சேத முற்றது. அதில் பயணித்த காவலர்கள் படுகாயமடைந்தனர். விபத்து நடந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர், ஊமங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற ஊமங்கலம் போலீஸார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் கடுமையான போராட்டத்துக்குப் பின், உதவி ஆய்வாளர், காவலரை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி முதலுதவி சிகிச்சை அளித்து, அதன் பின் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்து ஏற்படுத்திய மணல் லாரி ஓட்டுநர் தப்பியோடிய நிலையில், காவல்துறையினர் மணல் லாரியின் பதிவு எண்ணைக் கொண்டு விசாரணை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசராணையில் இந்த லாரி திமுக பிரமுகரான கணேசன் என்பவருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். விபத்து ஏற்படுத்திய இந்த லாரி திமுக பிரமுகரான கணேசன் என்பவருக்குச் சொந்தமானது.

SCROLL FOR NEXT