க்ரைம்

காவல் நிலையத்தில் பெண் கைதி உயிரிழந்த விவகாரம்: கோவையில் 2-வது நாளாக மாஜிஸ்திரேட் விசாரணை

செய்திப்பிரிவு

கோவை: கோவை காவல் நிலையத்தில் பெண் கைதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, உயிரிழந்த பெண்ணின் செல்போனை கைப்பற்றி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குழந்தை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த பாண்டியன் (45), அவரது மனைவி திலகவதி (40) ஆகியோரை கோவை ஆலாந்துறை காவல்நிலையத்தில் வைத்து, திருச்செந்தூர் போலீஸார் விசாரித்தனர். அப்போது, திலகவதி மயங்கி விழுந்து உயிரிழந்தார். கழிவறைக்குச் செல்லும் போது விஷம் சாப்பிட்டு அவர் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இது தொடர்பாக கோவை ஜே.எம்.5-வது மாஜிஸ்திரேட் சந்தோஷ் நேற்று முன்தினம் அரசு மருத்துவமனை, ஆலாந்துறை காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர். அதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் ஆலாந்துறை காவல் நிலையத்தில் விசாரணை நடத்தினார். உயிரிழந்த திலகவதி எப்போது காவல் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டார்,

அவரை விசாரித்த போலீஸார் யார், அவரை கழிவறைக்கு அழைத்துச் சென்றவர்கள் யார், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றவர்கள் யார் என்பது குறித்து விசாரித்தார். மேலும், போளுவாம்பட்டி அரசு மருத்துவமனைக்கும் சென்று, திலகவதி சிகிச்சைக்கு வரும் போது எந்த நிலையில் இருந்தார், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் யார் என்பன உள்ளிட்டவை குறித்து விசாரித்தார்.

இதற்கிடையே, திலகவதியின் செல்போனை கைப்பற்றிய போலீஸார், அதில் உள்ள தொடர்பு எண்கள் யாருடையது, யார் யாரிடம் அவர் பேசியுள்ளார், என்ன பேசியுள்ளார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், திலகவதி தனது செல்போனில் நரபலி கொடுப்பது தொடர்பான வீடியோக்களை அதிகளவில் பார்த்துள்ளதையும் கண்டறிந்த போலீஸார், நரபலிக்காக குழந்தையை கடத்தினாரா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT