க்ரைம்

அம்பேத்கர், திருவள்ளுவர் குறித்து அவதூறு: விஎச்பி முன்னாள் நிர்வாகிக்கு ஜாமீன்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை தி.நகரில் கடந்த செப்.11-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் பேசிய விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் மாநிலத் தலைவரான ஆர்.பி.வி.எஸ்.மணியன் (74), அம்பேத்கர் மற்றும் திருவள்ளுவர் குறித்து அவதூறாக பேசியதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மத்திய சென்னை நிர்வாகி இரா.செல்வம் போலீஸில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் மணியன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு ஜாமீன் கோரி இரண்டாவது முறையாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மணியன் தரப்பில் பாஜக வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ் ஆஜராகி அவர் தரப்பில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரி பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தார்.

மேலும், அவருடைய வயோதிகத்தை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும் என கோரினார். அதையடுத்து மறு உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை விசாரணை அதிகாரி முன்பாக தினமும் காலையில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் மணியனுக்கு ஜாமீன் வழங்கி முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

SCROLL FOR NEXT