சென்னை: வடபழனியில் நிதி நிறுவன மேலாளர் வீட்டில் 31 பவுன் நகைகள் மாயமாகியுள்ளன. இதுகுறித்து சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் அடிப்படையில் போலீஸார் துப்பு துலக்கி வருகின்றனர்.
சென்னை, கே.கே.நகர், 15-வது செக்டார் 94-வது தெருவை சேர்ந்தவர் அலோசியஸ் ஜோசப் (44). தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் இணை பொது மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் வடபழனி காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் ஒன்று அளித்தார். அதில், ``எனது உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு மனைவியுடன் செல்ல முடிவு செய்தேன். இதற்காக வீட்டிலிருந்த நகைகளை மனைவிக்கு எடுத்துக் கொடுக்க முயன்றபோது பீரோவிலிருந்த செயின், நெக்லஸ், பிரேஸ்லெட் உட்பட 31 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன.
அதை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். எனவே, சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து, எனது வீட்டிலிருந்து மாயமான நகைகளை மீட்டுத் தர வேண்டும்'' என புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். வீட்டின் பூட்டு மற்றும் பீரோ ஏதும் உடைக்கப்படாததால் அடிக்கடி வந்து செல்லும் நபர்கள்தான் கைவரிசை காட்டியிருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
மேலும், வீட்டில் பணி செய்து வரும் பணிப்பெண் மீதும் போலீஸாரின் சந்தேகப் பார்வை விழுந்துள்ளது. முதல் கட்டமாக வெளியிலிருந்து யாரேனும் அலோசியஸ் ஜோசப்வீட்டுக்குள் நுழைந்தார்களா என்பதைக் கண்டறிய சம்பவஇடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.