தூத்துக்குடி: ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வழக்கில் டிஎஸ்பிக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை தேரி சாலையைச் சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன்கிருபாகரன் சாம். இவர் வெளிநாட்டில் வசித்து வந்தார். இவருக்குச் சொந்தமான நிலம் புதுக்கோட்டை பகுதியில் உள்ளது.
அந்த நிலத்தைப் பராமரிப்பதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில், கிருபாகரன் சாம் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் புதுக்கோட்டை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை 2009 முதல் 2011-ம் ஆண்டு வரை, தூத்துக்குடி காவல் துறை ஊரக துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வந்த ஜெயக்குமார் விசாரித்தார். அப்போது, வழக்கில் இருந்து விடுவிக்க ரூ.3 லட்சம் லஞ்சம் தருமாறு டிஎஸ்பி ஜெயக்குமார் கேட்டுள்ளார். ஆனால், கிருபாகரன் சாம் லஞ்சம் கொடுக்கவில்லை.
பின்னர், முதல்கட்டமாக ரூ.50 ஆயிரம் வழங்குமாறு டிஎஸ்பி கேட்டுள்ளார். இதுகுறித்து கிருபாகரன் சாம், தூத்துக்குடி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார்.
போலீஸார்ஏற்பாட்டின்படி, கடந்த 2011 டிசம்பர் 16-ம் தேதி தூத்துக்குடி ஊரக துணை காவல் கண்காணிப்பாளர் முகாம் அலுவலகத்தில், ரூ.50 ஆயிரத்தை கிருபாகரன் சாம், டிஎஸ்பி ஜெயக்குமாரிடம் வழங்கினார். அப்போது,அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீஸார் டிஎஸ்பி ஜெயக்குமாரைக் கைது செய்தனர்.
இந்த வழக்கு தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.இதில், டிஎஸ்பி ஜெயக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஆர்.செல்வக்குமார் நேற்று தீர்ப்பளித்தார். டிஎஸ்பி ஜெயக்குமார் தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.