க்ரைம்

சென்னை | விமான பயணிகளிடம் மது போதையில் தகராறு செய்தவர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: ஓமனில் இருந்து சென்னை வந்த விமானத்தில், மது போதையில் சக பயணிகளிடம் தகராறில் ஈடுபட்ட பயணி ஒருவர் கைது செய்யப்பட்டார்.

ஓமன் நாட்டின் தலைநகர் மஸ்கட்டில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் 164 பயணிகளுடன் சென்னைக்கு வந்து கொண்டு இருந்தது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கத்தை சேர்ந்த பயணி சுரேந்தர் (34) என்பவர், விமானத்தில் மதுவை அதிக அளவில் வாங்கி அருந்தியதாகக் கூறப்படுகிறது. மேலும், அவர் மது போதையில் சக பயணிகளிடம் தகராறு செய்ததால், இதுகுறித்து விமானப் பணிப்பெண்களிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விமான பணிப்பெண்கள் எச்சரித்தும் அவர் கேட்காததால், விமானியிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, விமானி உடனடியாக சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அறையைத் தொடர்பு கொண்டு, மது போதையில் இளைஞர் தொந்தரவு செய்வது குறித்து புகார் அளித்தார்.

அந்த விமானம் சென்னை விமான நிலையத்துக்கு வந்ததும், தகராறில் ஈடுபட்ட பயணியைப் பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்துச் சென்று போலீஸாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, போலீஸார் சுரேந்தரைக் கைது செய்து, அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT