க்ரைம்

ரூ.500 கோடி கடன் தருவதாக ரூ.12.60 கோடி மோசடி: தனியார் வங்கி துணை பொது மேலாளர் உட்பட 3 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜன்பாபு (60). இவர் தனது தொழிலை விரிவுபடுத்த வேண்டி, சென்னை அண்ணாநகரில் இயங்கி வரும் பைனான்ஸ் நிறுவனத்தை அணுகினார். அந்த நிறுவனத்தை நடத்தி வந்த சரவணன் என்கிற அய்யாசாமி ரூ.500 கோடி கடனுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் சரவணன், ராஜன்பாபுவை தொடர்பு கொண்டு ரூ.500 கோடி கடனுக்கு ஏற்பாடு செய்துவிட்டதாகவும், சென்னை வருமாறும் கூறியுள்ளார். இதை நம்பி கடந்த 11-ம் தேதி ராஜன்பாபு கோயம்புத்தூரிலிருந்து சென்னை வந்துள்ளார்.

பின்னர் சரவணன் தனது நிறுவனத்தில் பணியாற்றும் 3 பேருடன் ராஜன்பாபுவையும் அழைத்துக் கொண்டு நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தனியார் வங்கி ஒன்றுக்கு சென்றுள்ளார். அங்கு வங்கி துணை பொது மேலாளரான பெரம்பூர் சாஸ்திரி நகரைச் சேர்ந்த பாலாஜி (29) என்பவரை அறிமுகப்படுத்தினார். பாலாஜி ரூ.500 கோடியை தங்களது கணக்கில் வரவு வைக்க ரூ.12.60 கோடி முன் பணமாகச் செலுத்த வேண்டும் என ராஜன்பாபுவிடம் கூறியுள்ளார்.

இதை நம்பிய ராஜன்பாபு உடனே ரூ.12.60 கோடிக்கான காசோலையை வங்கி துணை பொது மேலாளர் பாலாஜியிடம் கொடுத்துள்ளார். பாலாஜி அந்தபணத்தை 4 வங்கிக் கணக்குகளுக்கு பரிவர்த்தனை செய்வதைக்கண்டு சந்தேகம் அடைந்த ராஜன்பாபு, தனது நிறுவனத்துக்காக தருவதாகக் கூறிய ரூ.500 கோடி கடன் குறித்து கேட்டபோது, சற்றுநேரத்தில் வரவு வைக்கப்படும்என சரவணன் கூறிவிட்டு வங்கியிலிருந்து வெளியேறியுள்ளார்.

பின்னர் பாலாஜியிடம் பணம்குறித்து கேட்டபோது, அவரும் உடனே வந்துவிடும் என மழுப்பலாகக் கூறியுள்ளார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜன்பாபு இதுகுறித்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.

விசாரணையில் ராஜன்பாபுவிடம் திட்டமிட்டு பண மோசடிநடைபெற்றது உறுதி செய்யப்பட்டது. இந்த மோசடி தொடர்பாக சம்பந்தப்பட்ட தனியார் வங்கி துணை பொது மேலாளர் பாலாஜி,பைனான்ஸ் நிறுவன ஊழியர்கள் சென்னை ஆழ்வார் திருநகர் புவனேஷ்வரன் (22), அரும்பாக்கம் கோவிந்தன் (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள சரவணனை தனிப்படை அமைத்து போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT