கோவை: கோவை சேரன்மாநகர் அருகேயுள்ள பாலாஜி நகரை சேர்ந்தவர் சக்கரவர்த்தி. பெயின்டிங் கான்டிராக்டர். இவரது மனைவி ஜெகதீஸ்வரி (41). இவர்களுக்கு, பிளஸ் 2 படிக்கும் மகள் உள்ளார். ஜெகதீஸ்வரி தினமும் மாலை பள்ளிக்குச் சென்று, மகளை அழைத்து வருவது வழக்கம்.
நேற்று மாலை ஜெகதீஸ்வரி பள்ளிக்கு வராததால், சில மணி நேரம் பள்ளியில் காத்திருந்த அவரது மகள் வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது, ஜெகதீஸ்வரி ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தகவலின்பேரில் பீளமேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு விசாரணையில் ஈடுபட்டனர். காவல் துணை ஆணையர் சண்முகம், காவல் உதவி ஆணையர் பார்த்திபன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணையை துரிதப்படுத்தினர்.
முதல்கட்ட விசாரணையில், ஜெகதீஸ்வரி அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலி, 1 பவுன் கம்மல் ஆகியவை மாயமாகியிருந்தது தெரியவந்தது. வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்மநபர்கள், நகைக்காக ஜெகதீஸ்வரியை கொலை செய்திருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.