க்ரைம்

3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை: அஞ்செட்டி அருகே 8 பேர் மீது வழக்குப் பதிவு

செய்திப்பிரிவு

ஓசூர்: அஞ்செட்டி அருகே 3 குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கி வைத்த 8 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

அஞ்செட்டி அருகே பத்தி கவுண்டனூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியில் 60 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தையொட்டி அப்பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் மற்றும் நரேந்திரன் ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதில், நரேந்திரனுக்குச் சொந்தமான நிலத்தை அப்பகுதியில் உள்ள கோயிலுக்கு வாங்க அப்பகுதி மக்கள் முடிவு செய்து அந்நிலத்தை வாங்க முன்பணமாக ரூ.50 ஆயிரம் கொடுத்தனர்.

இந்நிலையில், பெட்டப் பள்ளியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் பத்திகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த திம்ம ராயன் என்பவர் மூலம் சிவக்குமார், நரேந்திரன் ஆகிய இருவருக்கும் சொந்தமான நிலத்தை விலைக்கு வாங்கினார். இதையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிரகாஷ் அந்த நிலத்தில் முள்வேலி அமைக்க சென்றபோது, கோயிலுக்காக நிலத்தை வாங்க முடிவு செய்திருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும், நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ய உடைந்தையாக இருந்த திம்மராயன் மற்றும் அவரது சகோதரர்களின் 3 குடும்பத்தினரைக் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்ததோடு, அவர்களது வீடுகளுக்குச் செல்லும் வழிப்பாதையை முள்வேலி போட்டு அடைத்தனர். மேலும், 3 குடும்பத்தினருடன் யார் பேசினாலும் அவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்தனர்

இது தொடர்பாக திம்மராயன் அஞ்செட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இதையடுத்து, போலீஸார் பத்திகவுண்டனூர் சென்று விசாரணை நடத்தினர். மேலும், திம்மராயன் வீட்டுக்குச் செல்லும் வழிப்பாதை அடைத்து வைத்திருந்த முள்வேலியை அகற்றினர். இது தொடர்பாக பத்தி கவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த மாதேஷ், பாலகுந்தன், பழனி, குமார், மாதேஷ், ராஜ், மாரியப்பன், ராஜா ஆகிய 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT