திருவாரூர்: திருவாரூர் மாவட்ட ஆயுதப் படைப் பிரிவில் காவலராகப் பணிபுரிந்து வரும் 22 வயதுடைய பெண் ஒருவர், பணி நிமித்தமாக கடந்த 18-ம் தேதி தஞ்சாவூர் சென்றுவிட்டு, மீண்டும் திருவாரூருக்கு பேருந்தில் வந்து கொண்டிருந்தார்.
வழியில் கொரடாச்சேரி பகுதியில் பேருந்து நின்றது. அப்போது, அந்த பெண் காவலர் பணிபுரியும் அதே ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணிபுரிந்த சற்குணம்(32) என்பவர், அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். அப்போது பேருந்தில் அமர்ந்திருந்த பெண் காவலரைப் பார்த்த சற்குணம், தனது மோட்டார் சைக்கிளில் திருவாரூர் செல்லலாம் என்று கூறியுள்ளார்.
இதையடுத்து, அந்த பெண் காவலர் பேருந்தில் இருந்து இறங்கி, சற்குணத்துடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். வழியில், பெண் காவலரிடம் சற்குணம் பாலியல் ரீதியாக தவறாக நடக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த பெண் காவலர் அளித்த புகாரின்பேரில் விசாரணை மேற்கொண்ட எஸ்.பி. சுரேஷ்குமார், புகாருக்கு உள்ளான காவலர் சற்குணத்தை பணியிடை நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.