சிறுவனின் உறவினர்கள் நேற்று கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முன்பு தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர் 
க்ரைம்

தருமபுரியில் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞர் போக்ஸோவில் கைது

செய்திப்பிரிவு

தருமபுரி: தருமபுரி அருகே 7 வயது சிறுவன் கொலையான சம்பவத்தில் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற இளைஞரை போலீஸார் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

கிருஷ்ணாபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 7 வயது சிறுவன் கடந்த 16-ம் தேதி வீட்டிற்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது மாயமானார். இது குறித்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கிருஷ்ணாபுரம் போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாலை காட்டம்பட்டி கிராமத்தின் அருகில் உள்ள பயன்பாடற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார். கைகள் மற்றும் வாய்ப் பகுதி கட்டப்பட்ட நிலையில் கழுத்து உள்ளிட்ட இடங்களில் காயங்களுடன் சிறுவன் இறந்து கிடந்தார். எனவே, சிறுவன் கொலை செய்யப்பட்டிருப்பது உறுதியானது.

கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளி குறித்து போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் (19) என்ற இளைஞருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது.

எனவே அவரை கைது செய்து போலீஸார் நடத்திய விசாரணையில், ஆள் நடமாட்டம் இல்லாத, பயன்பாடற்ற மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சிறுவனை அழைத்துச் சென்ற பிரகாஷ் சிறுவனை பாலியல் வன்கொடுமை செய்ததும், சம்பவத்தை சிறுவன் வெளியில் கூறி விடக் கூடாது என்பதற்காக கொலை செய்து அந்த தொட்டியிலேயே விட்டுவிட்டு வந்ததும் தெரிய வந்தது.

அதைத் தொடர்ந்து போக்ஸோ உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்து சிறைக்கு அனுப்பினர். இதற்கிடையில், சிறுவனின் சடலத்தை ஒரு நபர் மட்டும் மேல்நிலை நீர்த் தேக்க தொட்டிக்கு எடுத்துச் சென்றிருக்க முடியாது என்றும், கைதான நபருடன் தொடர்புடைய மற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி சிறுவனின் உறவினர்கள் நேற்று காலை கிருஷ்ணாபுரம் காவல் நிலையம் முன்பு தருமபுரி - திருப்பத்தூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். ‘ஒரு நபருக்கு மட்டுமே கொலையில் தொடர்பு இருப்பதை உறுதி செய்து அவரை கைது செய்துள்ளோம். தொடர் விசாரணையில் மேலும் யாருக்கேனும் தொடர்பு இருப்பது தெரிய வந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அவர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

SCROLL FOR NEXT