சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் சையத் சிக்கந்தர் (38). இவர், திருமங்கலம் பாடிகுப்பம், காந்திநகரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, மந்திரிப்பது உள்ளிட்ட மாந்திரிக தொழில் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, வீட்டில் ரத்த காயங்களுடன் மர்மமான முறையில் அவர் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
சம்பவம் அறிந்து வந்த திருமங்கலம் போலீஸார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், சிக்கந்தர் தனது நண்பர்கள் விக்கி (24), குற்ற வழக்கு பின்னணி கொண்ட புருஷோத்தமன் ஆகியோருடன் தங்கி இருந்துள்ளார். இவர்களுக்குள் கடந்த ஒரு வாரமாக பிரச்சினை இருந்துள்ளது. இந்த விவகாரம் காரணமாக சிக்கந்தர் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, இருவரையும் போலீஸார் தேடி வந்த நிலையில், நேற்று மதியம், இருவரும், மதுரை நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடக்கிறது.