காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் பகுதியில் திமுக பிரமுகரை வெட்டிக் கொலை செய்த வழக்கு தொடர்பாக 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
காஞ்சிபுரம், ஓரிக்கை சத்யாநகர் பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன்(37). இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். திமுகவில் 49-வது வட்ட துணைச் செயலராக உள்ளார்.
இவர் நேற்று முன்தினம் தனது குழந்தையை பள்ளியில் விட்டுவிட்டு, பகல் 11 மணியளவில் தன்னுடைய மோட்டர் சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள் திடீரென பூபாலனை வெட்டினர். இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய பூபாலனை உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு முதலுதவி சிகிச்சைஅளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுதொடர்பாக காஞ்சிபுரம் தாலுக்கா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ஓரிக்கை மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பூபாலன் பிரதான குற்றவாளியாக உள்ளார். இந்த கொலைக்கு பழிக்கு பழியாக மோகனின் நண்பர்கள் செல்வம், சரவணன், கார்த்திக், மதன் ஆகியோர் இந்தக் கொலையை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக இந்த 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.