திருவள்ளூர்: பணிக்கு தாமதமாக வந்த பெண் ஊழியரை கண்டித்ததால், கூலிப் படையை வைத்து அஞ்சலக அதிகாரியை வெட்டிய வழக்கில் கணவர் உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், மணலி மூலசத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் அசோகன். இவர் திருவொற்றியூர் அஞ்லகத்தில் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த ஜூன் 27ம் தேதி மணலி விரைவு சாலை எம்.எஃப்.எல் ரவுண்டானா அருகே அசோகன் சென்றபோது, காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் ஒன்று அவரை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியது.
இதில் பலத்த காயம் அடைந்த அசோகனை அங்கிருந்தவர்கள் மீட்டு திருவொற்றியூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து, சாத்தங்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், அஞ்சலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியரான சுகன்யா என்பவர் வேலைக்கு தாமதமாக வந்ததை அசோகன் கண்டித்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சுகன்யா தனது கணவரான வக்கீல் சுதாகரிடம், அதிகாரி அசோகன் அடிக்கடி தன்னை கண்டிப்பதாகவும், அவரை ஏதாவது செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதையடுத்து, சுதாகர் 4 பேருடன் சேர்ந்து அசோகனை தாக்கியது தெரியவந்தது. இது தொடர்பாக, சுகன்யாவின் கணவர் சுதாகர், செந்தில் குமார் ஆகிய 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.