விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் வடலூர் நாகேசன் நகரைச் சேர்ந்தவர் வேலாயுதம் (71). இவர் வெளிநாட்டில் வேலை செய்யும் தனது மகனை பார்ப்பதற்காக கடந்த 8-ம் தேதி வெளிநாடு சென்றார்.
இதையடுத்து வடலூர் பார்வதிபுரத்தை சேர்ந்த வேலாயுதத்தின் சகோதரர் மனைவி பூங்காவனம் என்பவர், நாகேசன் நகரில் உள்ள வேலாயுதத்தின் வீட்டில் இரவில் மட்டும் பாதுகாப்புக்காக தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பூங்காவனம் வேலைக்குச் சென்றுவிட்டு, இரவு 8 மணி அளவில் வேலாயுதத்தின் வீட்டுக்குச் சென்றார். அப்போது வீட்டின் முன்புற மின் விளக்கு அணைக்கப்பட்டு இருந்தது.
இதனால் அச்சமடைந்த பூங்காவனம் அக்கம்பக்கத்தினரை அழைத்து வந்து வீட்டுக்குள் சென்றபோது, வீட்டின் படுக்கையறையில் இருந்த பீரோக்கள் மற்றும் பின்புற கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து தஞ்சாவூரில் வசிக்கும் வேலாயுதத்தின் மகள் சவுந்தர்யாவுக்கு (39) தகவல் கொடுத்தார். அவர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், பீரோவில் இருந்த 103 பவுன் நகை மற்றும் ரூ.6 லட்சம் ரொக்கம் கொள்ளை போனதாக குறிப்பிட்டுள்ளார்.
தகவலறிந்த கடலூர் எஸ்பி ஜெயக்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். தொடர்ந்து, மர்ம நபர்களை பிடிக்க, நெய்வேலி டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளைபோன நகை யின் மதிப்பு ரூ.1 கோடியே 23 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.