க்ரைம்

ஆருத்ரா கோல்டு மோசடி வழக்கு - 50 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை அமைந்தகரையை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்ட ஆருத்ரா கோல்டு நிறுவனம், அதிக வட்டி தருவதாகக் கூறி லட்சக் கணக்கான முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.2 ஆயிரத்து 438 கோடி வசூலித்து மோசடி செய்ததாக நடிகர் ஆர்.கே.சுரேஷ், பாஜக நிர்வாகி ஹரீஷ் உட்பட பலர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

ஆருத்ரா நிறுவன நிர்வாக இயக்குநர்களான ராஜசேகர், உஷா ராஜசேகர், மைக்கேல் ராஜ் ஆகியோர் வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ளனர். இந்நிறுவனத்துடன் தொடர்புடைய 40 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் இதுவரை பாஸ்கர், மோகன் பாபு, செந்தில் குமார், நாகராஜன், பேச்சி முத்துராஜா, நடிகர் ரூஸோ உள்ளிட்ட பலரை கைது செய்தனர்.

மொத்தம் 61 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.6 கோடியே 35 லட்சம் ரொக்கம், ரூ.1 கோடியே 13 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி பொருட்கள், 22 கார்கள் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தவிர வங்கிக் கணக்கில் இருந்த ரூ.96 கோடி முதலீடு, ரூ.103 கோடி மதிப்புள்ள சொத்துகளும் முடக்கப்பட்டன.

இந்த வழக்கில் முதற்கட்டமாக 50 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையை போலீஸார் நேற்று சென்னையில் உள்ள நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் டி.பாபு ஆஜராகி, சுமார் 3 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆதாரங்கள் மற்றும் ஆவணங்களை போலீஸார் இன்னும் ஓரிரு நாட்களில் தாக்கல் செய்வர் என தெரிவித்தார். நேற்று தாக்கல் செய்யப்பட்ட 50 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிகையில் 360 புகார்களின் அடிப்படையில் ரூ. 17.50 கோடி மோசடி குறித்து மட்டும் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT