சென்னை: சைதாப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் வந்து, சாலையில் நடந்து சென்ற பெண்ணின் தங்கநகையை பறித்துச் சென்ற கொள்ளையன் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் பூங்கொடி (35). இவர் கடந்த 12-ம் தேதிஇரவு 7 மணி அளவில் சைதாப்பேட்டை கே.பி.கோயில் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர், பூங்கொடியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தங்க நகையை பறித்தார்.
நகையை பூங்கொடி பிடித்துக்கொண்டதால், இருசக்கர வாகனத்தை ஓட்டியபடியே அவரை தரதரவென இழுத்து கீழே தள்ளிய வழிப்பறி கொள்ளையன், அவரது நகையை பறித்துக்கொண்டு தப்பினார்.
சாலையில் தடுமாறி விழுந்த பூங்கொடி, அந்த வழியாக வந்தஆட்டோவின் முன்பு விழுந்தார். ஆட்டோ உடனடியாக நிறுத்தப்பட்டதால், லேசான காயங்களுடன் பூங்கொடி தப்பினார்.
இதுகுறித்து சைதாப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். முதல் கட்டமாக, சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, பூங்கொடியிடம் நகை பறிப்பில் ஈடுபட்டதாக சைதாப்பேட்டை கோதாமேடு பகுதியை சேர்ந்த ஹக்கீம் (24) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றக் காவலில் புழல் சிறையில் அடைத்தனர்.
சைதாப்பேட்டை காவல் நிலைய சரித்திர பதிவேடு குற்றவாளியான ஹக்கீம் மீது ஒரு கொலை முயற்சி, வழிப்பறி வழக்குகள் உட்பட 11 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
வழிப்பறி செய்த நகை மற்றும் இருசக்கர வாகனத்தை தனது நண்பர் மணிகண்டனிடம் ஹக்கீம் கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, மணிகண்டனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.