போடி: போடியில் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் தர மறுத்த துணை வட்டாட்சியர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தேனி மாவட்டம் போடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மண்டல துணை வட்டாட்சியராகப் பணிபுரிபவர் மு.குமரவேல். இவர் போடி முந்தல் சாலையில் உள்ள ஓர் உணவகத்தில் 3 பேருடன் உணவருந்தச் சென்றார். சாப்பிட்டு முடிந்ததும் ஊழியர்கள் பணம் கேட்டதற்கு நான் யார் தெரியுமா என்று மிரட்டியுள்ளார்.
இதையடுத்து உணவக மேலாளர் செல்வம் குரங்கணி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். ஹோட்டலில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீஸார், மண்டல துணை வட்டாட்சியர் குமரவேல் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதேபோல், தன்னை அவதூறாகப் பேசியதாக குமரவேல் கொடுத்த புகாரின்பேரில் மேலாளர் செல்வம் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.