ராமநாதபுரம்: இலங்கையிலிருந்து படகில் தங்கம் கடத்தி வருவதாக ராமநாதபுரம் சுங்கத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஜூன் 5-ம் தேதி பகலில் சுங்கத்துறையினர் படகில் ரோந்து சென்றனர். முயல்தீவு அருகே சந்தேகமளிக்கும் வகையில் சென்ற மீன்பிடி படகை விரட்டினர்.
உச்சிப்புளி அருகே நொச்சியூரணி கடற்பகுதி பாறையில் படகு மோதியதும், படகை விட்டுவிட்டு அதிலிருந்தவர்கள் தப்பி ஓடினர். படகுடன் தங்கக் கட்டிகளை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் ஒரு பகுதி தங்கத்தை கடலில் வீசியதாகத் கிடைத்த தகவலின்பேரில் தூத்துக்குடியைச் சேர்ந்த முத்துக்குளிக்கும் மீனவர்கள், கடலோரக் காவல்படையின் ஸ்கூபா டைவிங் வீரர்கள் மூலம் ஜூன் 6, 7 ஆகிய 2 நாட்கள் நொச்சியூரணி கடற்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்தது.
தங்கம் ஏதும் கிடைக்காததால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது. நொச்சியூரணி கடற்கரைக்கு கடந்த 5-ம் தேதி கடத்தி வந்த ரூ.1.54 கோடி மதிப்புடைய 2.50 கிலோ எடையுள்ள வெளிநாட்டுத் தங்கக் கட்டிகளை படகுடன் பறிமுதல் செய்ததாகவும் கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்து வருவதாகவும் சுங்கத் துறையினர் தெரிவித்தனர்.