ரவிக்குமார், விக்னேஷ், வனிதா, கவிதா 
க்ரைம்

மதுரவாயல் அருகே குடும்ப தகராறில் முதியவர் கொலை: உறவினர்கள் 4 பேர் கைது

செய்திப்பிரிவு

சென்னை: மதுரவாயல் அருகே குடும்பத் தகராறில்முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக உறவினர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மதுரவாயல், ஆலப்பாக்கம் கோவிந்தப்பன் நாயக்கர் முதல் தெருவைச் சேர்ந்தவர் அங்கப்பன் (65). இவர் வீட்டின் முன் பகுதியில் அங்கப்பனின் சகோதரர் முருகேசனும், அவரது மகன் ரவிக்குமாரும் (40) குடும்பத்துடன் வசிக்கின்றனர். அங்கப்பன் குடும்பத்துக்கும், முருகேசன் குடும்பத்துக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

தண்ணீர் பிடிக்கும்போது தகராறு: இந்நிலையில் அங்கப்பனின் மகள் விஜயலட்சுமி வீட்டின் அருகே உள்ள குடிநீர் குழாயில் நேற்று முன்தினம் காலை தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த ரவிக்குமாரின் மனைவி வனிதா (35), விஜயலட்சுமியிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த அங்கப்பனும், அவர் மனைவி கற்பகமும் அங்கு வந்து வனிதாவைக் கண்டித்தனர்.

இதைப் பார்த்து ரவிக்குமார், வனிதாவின் சகோதரி குன்றத்தூர் பிள்ளையோர் கோயில் தெருவைச் சேர்ந்த கவிதா (37), அவர் கணவர் விக்னேஷ் (42) ஆகியோர் அங்கப்பனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே அவர்கள், அங்கப்பனை தாக்கினர். இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த அங்கப்பன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். கொலை தொடர்பாக ரவிக்குமார், விக்னேஷ், வனிதா, கவிதா ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

          
SCROLL FOR NEXT