க்ரைம்

திருச்சி | தண்டவாளத்தில் டயர்களை வைத்த விவகாரம் - 8 பேரிடம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

திருச்சி: திருச்சி - சென்னை ரயில் வழித்தடத்தில் வாளாடி அருகே கடந்த 2-ம் தேதி இரவு தண்டவாளத்தில் 2 கனரக வாகன டயர்கள் வைக்கப்பட்டிருந்தன. அப்போது, அந்த வழியாகச் சென்ற கன்னியாகுமரி விரைவு ரயில் டயர்கள் மீது மோதியதில், இன்ஜினின் அடிப்பகுதியில் ஒரு டயர் சிக்கி, 4 பெட்டிகளில் மின் தடை ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக ரயில்வே டிஎஸ்பி பிரபாகர், லால்குடி டிஎஸ்பி அஜய்தங்கம் ஆகியோர் தலைமையில் 5 தனிப் படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

டிஎஸ்பி அஜய்தங்கம் தலைமையிலான போலீஸாரின் விசாரணையில், தண்டவாளத்தில் கிடந்த கனரக வாகன டயர், மேலவாளாடியைச் சேர்ந்த கலையரசனுக்குச் சொந்தமானது என தெரிய வந்தது. இதையடுத்து, தனிப் படை போலீஸார் அவரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், விபத்து நேரிட்ட பகுதியில் குறிப்பிட்ட நேரத்தில் பயன்பாட்டில் இருந்த செல்போன் எண்களை கண்டறிந்து, இதன்பேரில் சிறுவர்கள் 3 பேர் உட்பட 8 பேரிடம் தனிப் படை போலீஸார் தனித் தனியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT