மதுரை: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நேற்று முன்தினம் வைகாசி விசாகத் திருவிழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, பால்குடம், காவடிகள் எடுத்து நேர்த்திக் கடன் நிறைவேற்றினர்.
அப்போது, திருப்பரங்குன்றம் கோயில் அருகேயுள்ள சரவணப் பொய்கையில் சந்தேகப்படும் வகையில், வங்க மொழி பேசும் இளைஞர் ஒருவர் சுற்றித் திரிவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருப்பரங்குன்றம் போலீஸார் அவரைப் பிடித்து விசாரணை நடத்தினர். அவர் வங்கதேசத்தின் போக்ரா மாவட்டத்தைச் சேர்ந்த மூசா கரிமுல்லா (37) என்பதும், அவரிடம் பாஸ்போர்ட், விசா உள்ளிட்ட ஆவணங்கள் இல்லை என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததாக, மூசா கரிமுல்லாவை போலீஸார் கைது செய்தனர்.