புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை 3 கரோனா அலைகள் ஏற்பட்டுள்ளன. கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் சராசரியாக நாள்தோறும் 15,000 முதல் 20,000 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.
கடந்த மாதம் 27-ம் தேதி முதல் நேற்று முன்தினம் வரையிலான ஒரு வார காலத்தில் 1.1 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 192 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 மாதங்களின் புள்ளிவிவரங்களை ஒப்பிடும்போது கடந்த வாரம் அதிக கரோனா தொற்று, உயிரிழப்பு பதிவாகி உள்ளது. மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி நாடு முழுவதும் ஒரே நாளில் 16,135 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. 13,958 பேர் குணமடைந்து உள்ளனர். 24 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலவரப்படி 1.13 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.