சென்னை: தமிழகத்தில் இன்று ஆண்கள் 724, பெண்கள் 635 என மொத்தம் 1,359 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக சென்னையில் 616 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 65,490 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 21,552 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 621 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். தமிழகம் முழுவதும் 5,912 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று நோய்த்தொற்று பாதிப்பால் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.
தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 1063 ஆகவும், சென்னையில் 497 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. நேற்றும், இன்றும் தொற்று பாதிப்பு ஆயிரத்தை கடந்துள்ளது.
முன்னதாக, இன்று காலை நேர நிலவரப்படி இந்தியாவில் புதிதாக 17,336 பேர் கரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
88,284 பேர் நோய் தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். 13,029 பேர் கடந்ந 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக நாட்டில் 196.77 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும்போது பெற்றோர்கள் கவனமாக இருந்து, தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.