புதுடெல்லி: நாட்டில் புதிதாக 9,923 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,923 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 19 ஆயிரத்து 396 ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து ஒரே நாளில் 7,293 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 15 ஆயிரத்து 193 ஆக உயர்ந்தது.
தற்போது 79,313 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்று பாதிப்பால் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்தனர். இதுதவிர கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 5 மரணங்கள், மகாராஷ்டிராவில் 2, மேற்கு வங்கம், உத்தரபிரதேசம், ஜம்மு-காஷ்மீர், இமாச்சலபிரதேசத்தில் தலா ஒருவர் என மேலும் 17 பேர் இறந்துள்ளனர்.
இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,24,890 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் நேற்று 13,00,024 டோஸ்களும், இதுவரை 196 கோடியே 32 லட்சம் டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளன. நேற்று 3,88,641 பேருக்கு பரிசோதனைகளும், இதுவரை 85.85 கோடி மாதிரிகளும் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.