கரோனாவைத் தடுத்திட அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
வருமானம் இல்லாத நிலையில் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் பலவீனமாகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உதவி நிதி வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 20) வெளியிட்ட அறிக்கையில், "புதுவகையான கரோனா வைரஸ் தொற்று பரவி வரும் பேராபத்து உலக நாடுகளை உலுக்கி வருகிறது. இந்த உயிர்க்கொல்லி வைரஸ் தொற்றை எதிர்கொண்டு முறியடிக்க மருத்துவச் சமூகம் அர்ப்பணிப்பு உணர்வோடு களப்பணியாற்றி வருகிறது. ஆராய்ச்சி உலகம் நோய்த் தடுப்பு மற்றும் அழிப்புக்கான மருந்து கண்டுபிடிப்பதில் தீவிரமாகியுள்ளது. 130 கோடி மக்கள் தொகையுள்ள இந்திய நாட்டில் கரோன வைரஸ் தொற்று பரவுவதை தடுப்பது பெரும் சவாலாகும்.
நவதாராளமயக் கொள்கைகளால் மருத்துவச் சேவை கார்ப்பரேட் மயமாகி, லாபமீட்டும் தொழிலாகியுள்ளது. அரசு மருத்துவச் சேவையை மத்திய, மாநில அரசுகள் அலட்சியப்படுத்தியதால் கரோனாவை எதிர்க்கும் போராட்டம் கடினமாகியுள்ளது. அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையினர் குறைந்தபட்ச வசதிகளுடன் மன உறுதியோடு பணியாற்றி வருவது பாராட்டத்தக்கது. கரோனா வைரஸ் தொற்று மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணிகள் அரசின் பொறுப்பில் இருக்க வேண்டியதை வலியுறுத்துகிறது.
மத்திய, மாநில அரசுகள் கடந்த சில நாட்களாக மக்கள் ஓரிடத்தில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என அறிவிறுத்தி வருகின்றன. மக்கள் பெருமளவு வந்து செல்கிற பொதுத்துறை, தனியார் துறை, வங்கிகளின் செயல்படுவதிலும் வைரஸ் தொற்று பரவும் அச்சம் தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து அரசு சிந்திக்க வேண்டும். வரும் 22-ம் தேதி பிரதமர் அறிவித்துள்ள மக்கள் ஊரடங்கில் அனைவரும் பங்கேற்க வேண்டும்.
கரோனா வைரஸ் தொற்று தடுப்புக்காக தொழிற்சாலைகள், கல்வி நிலையங்கள், உணவகங்கள், வணிக நிறுவனங்கள் போன்றவை மூடப்பட்டுள்ளன. தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர். வருமானம் இல்லாத நிலையில் தொழிலாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தி மேலும் பலவீனமாகும் என்பதை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து வேலையிழந்த தொழிலாளர்களுக்கு உதவி நிதி வழங்குவது, தொழிற்சாலைகளுக்கு மின்கட்டண விலக்களிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.