அமைச்சர் விஜயபாஸ்கர்: கோப்புப்படம் 
கரோனா வைரஸ்

கரோனா: சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை; அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக நேற்று (மார்ச் 15) சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி திருப்புகழ் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், சீனா, பிரான்ஸ், இந்தோனேசியா, தென்கொரியா ஆகிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் கண்காணிக்கப்படுவதாகக் கூறினார்.

வரும் 15 தினங்களுக்கு மக்கள் ஒத்துழைப்பு அளித்தால், கரோனா பாதிப்பு இல்லாத நிலைக்குக் கொண்டு செல்ல முடியும் என அவர் கூறினார்.

ஒருநாளைக்கு கரோனா வைரஸ் தொடர்பாக 100 ரத்த மாதிரிகளை தமிழகத்தில் சோதனை செய்யலாம் எனவும் அவர் தெரிவித்தார். தமிழகத்தில் முகக்கவசம் அணிய வேண்டிய அவசியம் இல்லை எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஓரிரு நாட்களில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவார் எனவும் தமிழகத்தில் யாருக்கும் புதிதாக கரோனா பாதிப்பு இல்லை எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், கரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT