மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் கிராம மக்களுக்கு போலி கரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கியதாக மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
கரோனா வைரஸ் குறித்த பீதியும் அச்சமும் ஒருபக்கம் மக்களை வாட்டி வதைத்துக்கொண்டிருக்கும் வேளையில் மத்திய அரசு கரோனா வைரஸ் குறித்து தவறான வதந்திகளைப் பரப்பக்கூடாது என்று அறிவுறுத்திவருகிறது.
இந்நிலையில் இதை பயன்படுத்திக்கொண்டு மகாராஷ்டிராவில் போலி தடுப்பூசி வழங்கியதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து மகாராஷ்டிரா காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
டாக்டர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் எனக் காட்டிக் கொண்ட பீட் குடியிருப்பாளர்களான ராதா ராம்நாத் சாம்சே, சீமா கிருஷ்ணா அந்தலே மற்றும் சங்கீதா ராஜேந்திர அவாத் ஆகியோரை போலீசார் புதன்கிழமை கைது செய்தனர்.
மூவரும் அம்பாத் தாலுகாவில் உள்ள பிபல்கோவான் கிராம மக்களைச் சந்தித்து, கரோனா வைரஸிலிருந்து அவர்களைப் பாதுகாக்கக் கூடிய ஒரு தடுப்பூசி குறித்து அவர்களுக்குத் தகவல் அளித்து, அதை ஏமாற்றி உள்ளூர் மக்களுக்கு வழங்கினர்,
சில கிராமவாசிகள் இது குறித்து கிராமப்புற சுகாதார மையத்தின் மருத்துவ அதிகாரி டாக்டர் மகாதேவ் முண்டேவுக்கு தகவல் கொடுத்தனர், அதன் பின்னர் புகார் அளிக்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட போலி தடுப்பூசிகள் மற்றும் பாட்டில்கள் மாநில சுகாதாரத் துறைக்கு அனுப்பப்பட்டுள்ளன, மேலும் அவர் மூவருக்கும் எதிராக மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மகாராஷ்டிரா காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.