தனக்கு தடை போடுகிறவர்கள் யார் என்ற கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற ‘தாய் கிழவி’ படத்தின் விழாவில் பேசும்போது சிவகார்த்திகேயன் “திரையுலகில் இருப்பவர்கள் தான் தடைகள் போட்டுக் கொண்டே இருக்கிறார்கள்” என்று தனது பேச்சில் குறிப்பிட்டார். இதனை முன்வைத்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் நடைபெற்றது.
மதுரையில் ‘தாய் கிழவி’ படம் பார்த்துவிட்டு பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அவரிடம் தடைகள் யார் போடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சிவகார்த்திகேயன், ”அது யார் என்று சொல்லிவிட்டால், யூடியூப்பில் அதைப் போட்டு நிறைய பேர் பார்ப்பார்கள்.
அதை இன்னொருத்தரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. இங்கு எவ்வளவு விஷயத்தை தாண்டி வருகிறோம் என்பதற்காக சொன்னேன். இந்தக் கேள்வி வரும் போது, இனிமேல் அப்படி சொல்லாமல் தவிர்ப்பதும் எளிது தான்.
அதை நான் மேடையில் சொன்னதற்கு காரணம், என்னைப் பிடித்தவர்களுக்கு நீங்கள் இருப்பதால் தான் எவ்வளவு விஷயத்தை நான் கடந்து வருகிறேன் என்பதை சொல்வதற்காக மட்டுமே. அவர்களுடைய பெயரைச் சொல்லி தலைப்பு செய்தியாக்க அல்ல. யாரையும் குறை சொல்லவில்லை, இப்படியொரு சூழலைக் கடந்து வருகிறேன் என்று சொல்கிறேன் அவ்வளவு தான்” என்று பேசினார் சிவகார்த்திகேயன்.