தமிழ் சினிமா

“நான் கடவுளின் குழந்தை” - நடிகர் விஷால் உருக்கம்

ப்ரியா

“நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். நான் கடவுளின் குழந்தை” என்று நடிகர் விஷால் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

விஷால் இயக்குநராக அறிமுகமாகி இருக்கு ‘மகுடம்’ படம் இன்று வெளியாகியுள்ளது. படத்தின் வெளியீட்டை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். ஆம், நான் ஒருபோதும் பின்வாங்க மாட்டேன். நெவர் எவர். நான் விஷால். கடவுளின் குழந்தை.

சவால்கள் அதிகமானால், நான் மேலும் உயர்வேன். ஏனெனில், நான் வெட்கமோ தயக்கமோ இல்லாமல் கண்ணாடி முன் நின்று என்னைப் பார்க்க முடிகிறது. காரணம், நான் என் வேலையை உறுதியுடனும் மனவலிமையுடனும் செய்து வருகிறேன்.

நடிகராக என் கடமையை நிறைவேற்ற, உலகம் முழுவதும் உள்ள அன்பான ரசிகர்களுக்காக நான் எப்போதும் அந்த ‘ஒரு கூடுதல் மைல்’ செல்லத் தயார். என்னை இன்று இந்த நிலைக்கு கொண்டு வந்தது அவர்கள்தான். எனவே, அவர்களை நான் கடவுளுக்கு இணையாக மதிக்கிறேன்.

இன்று, 35 ஆண்டுகளாக இருந்த என் கனவு நனவாகும் தருணத்தில், எங்கள் படம் ‘மகுடம்’ மூலம் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக இயக்குநராக நான் உங்கள் முன் நிற்கிறேன்.

என் பணி முடிந்தது. கடந்த 14 மாதங்களாக நாங்கள் உழைத்ததை எல்லாம் உங்களுக்குக் காட்ட காத்திருக்கிறேன். உலகம் முழுவதும் இன்று படம் வெளியாகிறது. வாங்க... ஆரம்பிக்கலாம்’ என்று விஷால் தெரிவித்துள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில், விஷால் இயக்கி நடித்திருக்கும் படம் ‘மகுடம்’. திரையரங்குகளில் இன்று வெளியாகி இருக்கும் இந்தப் படத்தில் விஷாலுடன் துஷாரா விஜயன், அஞ்சலி, ஜான் விஜய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

முதலில், ரவி அரசு இயக்கத்தில் விஷால் நடிப்பில் ‘மகுடம்’ படம் தொடங்கப்பட்டது. படப்பிடிப்பில் இயக்குநர் ரவிக்கும், விஷாலுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டதால், படத்தை விஷால் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT