விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ் ராஜகுமாரி இயக்கியுள்ள இதில் தயாரிப்பாளர் லலித்தின் மகன் அக் ஷய் சிறைக் கைதியாக நடித்திருக்கிறார். ஒரு போலீஸ்காரருக்கும் கைதிக்குமான உறவைச் சொல்லும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க வைத்திருக்கிறது. படம் பற்றி விக்ரம் பிரபுவிடம் பேசினோம்.
மீண்டும் ஒரு போலீஸ் கதையில நடிச்சிருக்கீங்க...
ஆமா. ‘டாணாக்காரன்’ படத்தை இயக்கிய தமிழ்தான் ‘சிறை’ கதையை எழுதியிருக்கார். முதல்ல, ‘ஒரு போலீஸ் கதை இருக்கு, கேட்கிறீங்களா?’ன்னு அவர் கேட்டதும் ‘டாணாக்காரன்’ பண்ணினதுல இருந்தே போலீஸ் கதைகளா நிறைய வந்துட்டு இருக்கு. இதுவும் போலீஸ் கதையா?’ன்னு கேட்டேன்.
‘நேர்ல சொல்றேன் கேளுங்க’ன்னு வந்தார். சொன்னார். ரொம்ப சுவாரஸ்யமா இருந்தது. நிறைய புது விஷயங்களும் இருந்தது. வெற்றிமாறன் சார்ட்ட ஒர்க் பண்ணின, சுரேஷ் ராஜகுமாரி இயக்குறார்னு சொன்னதும் சரின்னு சொன்னேன். ஒரு உண்மைச் சம்பவக் கதையை ரொம்ப அருமையா பண்ணியிருக்கார். வசனங்களை எல்லோருமே பாராட்டுவாங்க.
‘டாணாக்காரன்’ போலீஸ்காரனுக்கும் இந்த கேரக்டருக்கும் என்ன வித்தியாசம்?
‘டாணாக்காரன்’ படத்துக்குப் பிறகு ஒரு பத்து போலீஸ் கதைகளாவது எனக்கு வந்திருக்கும். அது எதையுமே பண்ணல. அதுல இருந்து இந்தக் கதை ரொம்ப வித்தியாசமாகவும் என் கதாபாத்திரம் இதுல என்ன பண்ணுதுங்கற விஷயமும் ரொம்ப பிடிச்சிருந்தது. உடனே ஓகே சொல்லிட்டேன். ‘டாணாக்காரனு’க்கு 15 கிலோ உடல் எடை குறைச்சு நடிச்சேன்.
இதுல 15 கிலோ எடை அதிகரிச்சேன். போலீஸ் துறைக்குள்ளேயே இருந்து ஊறினவன் எப்படியிருப்பான்? அவன் மனநிலை எப்படியிருக்கும்? அவன் மற்றவங்களை எப்படி பார்க்கிறான்னு அந்த கேரக்டர் இருக்கும். நடிகனா இருக்கிறதால, நிறைய வாழ்க்கையை வாழலாம்ல. இந்த கதாபாத்திரத்துக்காக வேறொரு வாழ்க்கையை வாழ்ந்திருக்கேன்.
‘சிறை’ல உங்களோட கைதியா நடிச்சிருக்கிற அக் ஷய் எப்படி?
அது, தயாரிப்பாளர் லலித் மகன் அவர். ஒரு நல்ல படத்துல அறிமுகமாகணும்னு இதுல அறிமுகமாகிறார். பெரிய கமர்ஷியல் படம்னு நினைக்காம, ஒரு அர்த்தமுள்ள படத்துல அறிமுகப்படுத்தணும்னு இந்தக் கதையில நடிக்க வச்சிருக்கார். அக் ஷய் இந்தப் படத்து கேரக்டருக்காக ரொம்ப உழைச்சிருக்கார். சிறப்பா நடிச்சிருக்கார். அனிஷா உள்பட இதுல கேரக்டரா எல்லோருமே அருமையா நடிச்சிருக்காங்க.
இது உங்களுக்கு 25-வது படம்?
ஆமா. அதுக்குள்ள காலம் வேகமா ஓடியிருக்கு. சினிமாவுக்கு வந்து 13 வருஷம் ஆச்சு. நடுவுல கோவிட்ல 2 வருஷம் போயிடுச்சு. ஆரம்பத்துல இருந்தே நான் சினிமாவை அப்ரோச் பண்ணினது எப்படின்னா, கமர்ஷியலாகவும் இருக்கணும், அதே நேரத்துல நல்ல கதையும் சொல்லணும். ஒரு அனுபவமாகவும் இருக்கணும்னு நினைச்சுதான் ‘கும்கி’யில இருந்து சினிமா வாழ்க்கையை தொடங்கினேன். அதை நோக்கி போயிட்டிருக்கும்போது, என் விருப்பத்தை மீறி சில கட்டாயத்துக்குள்ள விழுந்திருக்கேன்.
இதை பண்ணியாகணுமா? பண்ணலாம்னு நடிச்சிருக்கேன். இப்ப அப்படியில்ல. கோவிட்டுக்கு பிறகு பார்வையாளர்கள், வெவ்வேறு விதமான கதைகளை விரும்ப ஆரம்பிச்சிருக்காங்க. நல்ல கதைகளைத் தேடறாங்க. அது ஒரு வகையில நடிகர்களுக்கும் இயக்குநர்களுக்கும் இந்த இன்டஸ்டஸ்ட்ரிக்குமே நல்ல விஷயம்தான். அதைதான் நான் ஆரம்பத்துல இருந்தே முயற்சி பண்ணிட்டிருந்தேன். அது இப்ப நடக்குது.
25 படங்கறது சினிமாவுல ஒரு மைல்கல்...
உண்மைதான். என் மேல இருக்கிற அழுத்தமே சினிமாவுல மூன்றாவது தலைமுறை நடிகன் அப்படிங்கறதுதான். தாத்தா (சிவாஜி கணேசன்) படங்கள்பண்ணின வேகத்துக்கும் அப்பா (பிரபு) படங்கள்ல நடிச்ச வேகத்துக்கும் நான் இப்ப பண்றதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. அப்படித்தான் சினிமாவும் வளர்ந்திருக்கு. இந்த நேரத்துல 25 படங்களை கடந்திருக்கிறதே பெரிய விஷயம்தான்.
என்னோட 25 வது படம், 2025-வது வருஷம் 25-ம் தேதி ரிலீஸ் ஆகறது மகிழ்ச்சியாஇருக்கு. அடுத்த 25 வருஷம் என்ன பண்ணப்போறேன்னு கேட்டா, எங்கிட்ட அப்படி எதுவும் இல்லை. இன்னைக்கு இங்க இருக்கிறதையே, நான் திட்டமிடலை. அதனால ரொம்ப எதையும் யோசிக்க மாட்டேன். அன்னன்னைக்கு என்ன பண்ணணுமோ, அதை மட்டுமே பார்ப்பேன். அதிகம் எதிர்பார்த்தா, அதுவே சில நேரம் ஏமாற்றமாயிடும். அடுத்த 25 வருஷத்துல இன்னும் அதிகமான அனுபவங்கள் கிடைச்சிருக்கும். சினிமாங்கறது கற்றல் தானே. சினிமாவுக்கு வந்த இத்தனை வருஷத்துல நான் தெரிஞ்சுகிட்ட விஷயங்களை அடுத்தடுத்த வருஷங்கள்ல இன்னும் சிறப்பா பயன்படுத்துவேன்னு நினைக்கிறேன்.
‘அன்னை இல்ல’த்துல இருந்து வர்ற நடிகர்ங்கறது உங்களுக்கு பிளஸ்னு நினைக்கிறீங்களா?
கண்டிப்பா அது பிளஸ்தான். அது ஒரு ஆசிர்வாதம். அதோட அது பொறுப்பும் கூட. முதல்ல என்னை அப்ரோச் பண்றதுக்கு ரொம்ப யோசிப்பாங்க. இப்ப அப்படியில்ல. நிறைய புது இயக்குநர்களோட ஒர்க் பண்ணியிருக்கேன். அவங்ககிட்ட இருந்தும் கற்றிருக்கேன். ‘யார் உங்க தாத்தா?’ன்னு கேட்டா சிவாஜின்னு சொல்றதும் ‘யார் உங்கப்பா?’ன்னு கேட்டா, பிரபுன்னு சொல்றதும் எனக்கு பெருமைதான். அவங்களுக்கு என்னால இன்னும் பெருமை சேர்க்க முடிஞ்சா அது இன்னும் நல்லாயிருக்கும்.