தனுஷ் உடனான நட்பை இழந்தது மிகப்பெரிய அவமானம் என்று விக்னேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘எல்.ஐ.கே’ திரைப்படம் ஏப்ரல் 10-ம் தேதி திரைக்கு வரவுள்ளது. நீண்ட பிரச்சினைகளுக்கு பிறகு திரைக்கு வரவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் தனுஷ் உடனான நட்பு, பிரச்சினை உள்ளிட்டவை குறித்து விக்னேஷ் சிவன் பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அப்பேட்டியில் விக்னேஷ் சிவன், “தனுஷை எனக்கு ரொம்ப பிடிக்கும். அவரை நடிகராக தாண்டி ரொம்ப பெரிய இடத்தில் பார்க்கிறேன். ஏனென்றால் அவருடைய பிறந்த நாள் ஜூலை 28-ம் தேதி, அது தான் எனது அப்பா இறந்த நாள். ஆகையால் அவர் மீது மிகுந்த அன்பு வைத்துள்ளேன். சில விஷயங்கள் எதனால் நடந்தது, எப்படி நடந்தது என்று தெரியவில்லை. அவருடைய நட்பை இழந்தது எனது மிகப்பெரிய இழப்பாக நினைக்கிறேன். ஒரு நல்ல நட்பை இழந்துவிட்டதால் அதனை அவமானமாகவும் பார்க்கிறேன்.
ஏதோ ஒரு இடத்தில் தவறு நடந்திருக்கிறது. இன்றைக்கு நான் இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் தனுஷ். ’விஜபி’ பட சமயத்தில் சுமார் 2 ஆண்டுகளாக அவர் கூடவே இருந்தேன். அந்த சமயத்தில் எல்லாம் அவர் சாப்பிட்டால் தான் நான் சாப்பிடுவேன். ‘விஜபி’ வெளியான சமயத்தில் அவர் ‘ஷமிதாப்’ படப்பிடிப்பில் இருந்தார்.
இங்கு திரையரங்கில் ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். இங்கு நடந்ததை நான் போனில் சொன்ன போது, அவர் கலங்கியது எனக்கு தெரிந்தது. அந்த மாதிரி எனக்கு நிறைய அழகிய சம்பவங்கள் அவருடன் இருக்கிறது. அப்படியிருந்த நட்பு சில விஷயங்களால் இப்போது இல்லை.
வாழ்க்கையில் எந்த விஷயத்துக்கு வருந்துக்கிறீர்கள் என்று கேட்டால், தனுஷ் உடனான நட்பை இழந்ததை வருத்தமாக பார்க்கிறேன். ஒரு சரியான பிரச்சினையால் இருவரும் பிரிந்தார்கள் என்றால் அதனை சரி செய்ய முடியும். பிரச்சினையே இல்லாமல் இருவரும் பிரிந்தால் என்ன செய்ய முடியும். அதனை எப்படி சரி செய்வது என தெரியவில்லை. தனுஷ் மீது மிகுந்த அன்பு, மரியாதை, நன்றியுணர்வு அனைத்துமே இருக்கிறது. அது எனது இறுதி மூச்சு வரை இருக்கும் என்பது எனக்கு மட்டுமே தெரியும்” என்று தெரிவித்துள்ளார் விக்னேஷ் சிவன்.
விக்னேஷ் சிவன் – நயன்தாரா இருவரது திருமண நிகழ்ச்சியினை ஓடிடிக்கு விற்பனை செய்திருந்தார்கள். இந்த வீடியோ பதிவில் ‘நானும் ரவுடி தான்’ படத்திலிருந்து பாடல் மற்றும் சில காட்சிகளை உபயோகித்திருந்தார்கள். அப்படத்தின் தயாரிப்பாளரான தனுஷிடம் தடையில்லா சான்றிதழ் கேட்டார் விக்னேஷ் சிவன். அவர் அதனை வழங்கவில்லை. அதுவே இருவருக்கும் இடையே பிரச்சினையின் ஆரம்ப புள்ளி என்று திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.