பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் த்ரிஷா, ராதிகா சரத்குமார், அபர்ணா பாலமுரளி நடிப்பில் உருவாகும்த்ரில்லர் படத்தின் படப்பிடிப்பு இன்று லண்டனில் தொடங்கியது.
லோகோமோட்டிவ் குளோபல் நிறுவனத்துடன் பனோரமா ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைந்து தமிழில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தை மலையாள இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் இயக்குகிறார்.
இந்தப் படத்தில் த்ரிஷா, ராதிகா சரத்குமார் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் டார்க் சைக்கலாஜிக்கல் ஜானரில் உருவாகிறது. படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இயக்குநர் ராஜா கிருஷ்ண மேனன் கூறும்போது, ‘இந்தப் படம் பல வகைகளில் எனக்கு முதல் அனுபவமாக அமைந்துள்ளது. இது என்னுடைய முதல் தமிழ்ப் படம், முதல் சைக்கோ த்ரில்லர் படம். பெண்களை மையமாகக் கொண்ட எனது முதல் கதையும் இது’ என்று தெரிவித்துள்ளார்.